மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளம்பெண் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளம்பெண் பலி
x
தினத்தந்தி 23 Jun 2019 10:00 PM GMT (Updated: 23 Jun 2019 9:33 PM GMT)

திண்டுக்கல்லில், மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கோவிந்தாபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் இதயத்துல்லா. அவருடைய மகள் ஆரிபா (வயது 18). ஆர்.எம்.காலனியை சேர்ந்த முருகேசன் மகன் ஜெயப்பிரகா‌‌ஷ் (18). ஆரிபாவும், ஜெயப்பிரகாசும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-பழனி சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த சுப்புராமன் (48) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஜெயப்பிரகா‌‌ஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆரிபாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல் ஜெயப்பிரகா‌‌ஷ், சுப்புராமன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆரிபா கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரிபா நேற்று பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஜெயப்பிரகாசுக்கும், சுப்புராமனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story