மூளைச்சாவு அடைந்த மேற்கு வங்காள பெண் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த மேற்கு வங்காள பெண் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:01 PM GMT (Updated: 23 Jun 2019 11:01 PM GMT)

மூளைச்சாவு அடைந்த மேற்கு வங்காள பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

வேலூர்,

மேற்குவங்காள மாநிலம் புருலியா மாவட்டம் வில்கர்மா பகுதியை சேர்ந்தவர் சுரஜித்மண்டல். இவரது மனைவி நயன்மண்டல் (வயது 30), கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 12-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுய நினைவு இழந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர், நயன் மண்டலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். நயன்மண்டல் மூளைச்சாவு அடைந்தாலும் நல்ல நிலையில் உள்ள அவரது உடல் உறுப்புகளாவது மற்றவர்களுக்கு பயனளிக்கட்டும் என கருதி அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நயன்மண்டலின் உடல் உறுப்புகளான கல்லீரல், ஒரு சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றை டாக்டர்கள் பத்திரமாக அகற்றினர். அந்த உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


Next Story