விளையாடியபோது விபரீதம்: சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி தந்தை சாவு


விளையாடியபோது விபரீதம்: சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி தந்தை சாவு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 7:06 PM GMT)

சேரன்மாதேவி அருகே சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி தந்தை பரிதாபமாக இறந்தார். அவன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நடந்தது.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள உலகன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி முத்துசெல்வி. இவர்களுக்கு பால் வில்சன் (2) என்ற மகனும், பன்சிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

முத்துகுமார் தனது மனைவியின் ஊரான பிள்ளைகுளம் பகுதியில் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அவர் தனது வீட்டின் அருகில் டிராக்டரை நிறுத்தி இருந்தார். அந்த டிராக்டரின் மீது சிறுவன் பால் வில்சன் ஏறி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அதை அவனுடைய தந்தை முத்துக்குமார் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் டிராக்டரில் இருந்த சாவியை பிடித்து திருகினான். இதனால் டிராக்டர் இயங்கி, அங்கு நின்று கொண்டிருந்த முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் விளையாடியபோது ஏற்பட்ட விபரீதத்தால் டிராக்டர் மோதி தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story