புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி


புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 7:31 PM GMT)

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், பல்லவராயன்பத்தை அருகே உள்ள ஆத்தியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது குடும்பத்தினரை, அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக சமூக ரீதியாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து துரைராஜ் தரப்பினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து துரைராஜ் ஐகோர்ட்டு உத்தரவு நகலை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி உள்ளார். ஆனால் போலீசார் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று துரைராஜ் தனது மனைவி சின்னபொண்ணு, மகன்கள் பாரதி, ஜெயபாரதி மற்றும் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

அப்போது தனது புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, துரைராஜ், சின்னபொண்ணு, பாரதி, ஜெயபாரதி ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கு மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த லாரியில் இருந்த தண்ணீரை துரைராஜ், சின்னபொண்ணு, பாரதி, ஜெயபாரதி ஆகியோர் மீது ஊற்றினார்கள். பின்னர் அவர்கள் 4 பேரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, மனுவை பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை குறித்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாசிடம் கேட்டபோது, ‘மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து துரைராஜ், குணசேகரன் ஆகிய இரு தரப்பை சேர்ந்தவர்களை அழைத்து விசாரணை நடத்தினோம். ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை’ என்றார்.

Next Story