தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்கு குளித்த மீனவர் கதி என்ன? விசைப்படகு வலையில் சிக்கியதாக போராட்டம்-பரபரப்பு


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்கு குளித்த மீனவர் கதி என்ன? விசைப்படகு வலையில் சிக்கியதாக போராட்டம்-பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2019 11:15 PM GMT (Updated: 24 Jun 2019 8:12 PM GMT)

தூத்துக்குடியில் சங்கு குளித்த மீனவர் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கியதாக நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மீனவர் கதி என்ன? என்பது தெரியவில்லை.

தூத்துக்குடி,

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஜோசப் சேகர். இவருடைய மகன் சந்தீஸ்டன் (வயது 23). இவர் திரேஸ்புரத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றார். இந்த படகில் மொத்தம் 9 பேர் சென்று உள்ளனர்.

அவர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டு இருந்தனர். சந்தீஸ்டன் கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த பகுதியில் திரேஸ்புரத்தை சேர்ந்த தாமஸ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு வந்தது. அந்த படகில் இருந்தவர்கள் மீன்பிடிப்பதற்காக வலையை கடலுக்குள் இறக்கி விட்டு இழுத்து சென்றார்களாம். இதில் எதிர்பாராதவிதமாக கடலுக்கடியில் சங்கு குளித்து கொண்டு இருந்த சந்தீஸ்டனும் வலையில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அங்கு படகில் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த விசைப்படகு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது. அந்த படகில் இருந்த 8 பேரையும், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சந்திஸ்டன் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் திரண்டனர். விசைப்படகு மீனவர் வலையில் சங்கு குளி மீனவர் சிக்கிய விவரம் நாட்டுப்படகு மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் சுமார் 25 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்துக்குள் விசைப்படகுகள் நுழையும் பகுதியில் படகுகளை கொண்டு வழியை மறித்து போராட்டம் நடத்தினர். எந்த விசைப்படகும் மீன்பிடி துறைமுகத்துக்குள் செல்லாத வகையில் தடுத்து நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் படகுகளுடன் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றனர். மேலும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார், நாட்டுப்படகு மீனவர்கள் காணாமல் போன சந்தீஸ்டனை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story