வெவ்வேறு சம்பவம்: டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


வெவ்வேறு சம்பவம்: டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 9:27 PM GMT)

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 36). கார் டிரைவரான இவர் திருமணமாகாமல் இருந்தார். தினமும் வீட்டிற்கு இரவில் வரும் போது மது குடித்து விட்டு வருவாராம். இதனால் தியாகராஜனை அவரது வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தியாகராஜன் வழக்கம் போல மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன்பின் வீட்டில் தனது அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் தியாகராஜனின் அறைக்கதவு திறக்காததால் வீட்டில் இருந்த அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலை செய்த தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருவானைக்காவல் பொன்னுரங்கபுரத்தை சேர்ந்தவர் சங்கிலியின் மகள் சத்யவள்ளி (21). இவர் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்து வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 40). கொத்தனாரான இவர் குடிபோதைக்கு அடிமையானார். இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் வீட்டில் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பொன்னுசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story