மாணவ- மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் - அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


மாணவ- மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் - அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 6:03 PM GMT)

மாணவ-மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்ட புகாரின்பேரில், அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு கந்தசாமி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக ஜெயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை தலைமை ஆசிரியை ஜெயந்தி, சாதி பெயரை சொல்லி திட்டி, பிரம்பால் அடித்துள்ளார் இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் 3 பேரும் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கல்வி அதிகாரியிடமும் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்த னர். அதன்பேரில் எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி கீதா மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கந்தசாமி நகர் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதன் அடிப்படை யில் தலைமை ஆசிரியை ஜெயந்தியை பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார். 

Next Story