தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி


தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 7:33 PM GMT)

தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்துவிழுந்து ஒப்பந்த ஊழியர் பலியானார். மற்றொரு ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்திலிருந்து, தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது தாராபுரம் புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே இருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் சாலையோரமாக மாற்றி நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இந்த பணியில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த 11 வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஒரு வாரமாக தாராபுரத்தில் தங்கி இருந்து மின் கம்பங்களை அகற்றி மீண்டும் சாலையோரத்தில் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று புறவழிச்சாலையில் சகுனிபாளையம் பிரிவு அருகே, ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு இருந்த மின் கம்பங்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மின் கம்பத்தில் இருந்த மின்கம்பிகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஏற்கனவே அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்திருந்ததால், எதிர்பாராத விதமாக திடீரென அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது.

அதைத்தொடர்ந்து அந்த மின் கம்பத்துடன் மின் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த மற்ற 2 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதில் ஒரு மின் கம்பத்தின் மேலே அமர்ந்து பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நெடுங்குளம், தெற்கு குப்பண்ணாபுரத்தை சேர்ந்த ஜெயபாண்டியனின் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 24) என்பவர் மின்கம்பத்துடன் சேர்ந்து கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அந்தபகுதியில் நின்றிருந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமியின் மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக, தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இசக்கிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. படுகாயம் அடைந்த இசக்கிமுத்துவுக்கு திருமணமாகி மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

தாராபுரம் பகுதியில் நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு வழிச்சாலை திட்டப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் இருப்பதே, உயிரிழப்புகளுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.


Next Story