அம்பகரத்தூர் கோவில் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


அம்பகரத்தூர் கோவில் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 8:18 PM GMT)

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் கிராம மக்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே 2 மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட பா.ம.க.வினர் கிராம மக்களுடன் இணைந்து பழைய ரெயில் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுசெயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், திருமருகல் ஒன்றிய செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சங்கர், கபீர், குமார் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசு கலால் துறை விதிகளின்படி கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே 100 மீட்டர் தூரத்தில் மதுபான கடைகள் இயங்கக் கூடாது. ஆனால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான பாப்ஸ்கோ மதுபான கடை, தனியார் மதுபான கடை என 2 மதுபான கடைகள் 40 மற்றும் 70 மீட்டர் தூரத்தில் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்தில் வந்து செல்கிறார்கள். மதுக்கடைகளால் சில நேரங்களில் விபத்துகள் நடக்கிறது. இதனால் இந்த 2 மதுக்கடைகளையும் அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது பா.ம.க.வினர் வலியுறுத் தினர்.

Next Story