இளையான்குடி பகுதியில் குழாய் உடைந்து காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வரும் அவலம்


இளையான்குடி பகுதியில் குழாய் உடைந்து காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வரும் அவலம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 8:45 PM GMT)

இளையான்குடி பகுதியில் குழாய்கள் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளையான்குடி,

தமிழகத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்ததால் பல்வேறு இடங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளான குளம், ஆறு, வாய்க்கால், ஊருணி, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டமாக இருந்து வருவதால் ஆண்டுதோறும் இங்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த 2 மாவட்டங்களின் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் இருந்து பெரிய, பெரிய குழாய்கள் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 மாவட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி வழியாக பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த பகுதியில் உள்ள குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் குடிதண்ணீர் வீணாகி அருகில் உள்ள வயல்கள், கண்மாய்களில் தேங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இளையான்குடி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைந்தும், சில இடங்களில் இணைப்பு வால்வு பகுதி உடைந்தும் காணப்படுகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

இது தவிர இளையான்குடி அருகே பெரும்பாலை கிராமத்தில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் குழாயை சில மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து தண்ணீரை எடுத்து நூதன முறையில் தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

காவிரி கூட்டுக்குடிநீர் பராமரிப்பு பணியாளர்களிடம் கூறினால், எங்களுக்கு வரவேண்டிய சம்பளம் பணம் கோடிக்கணக்கில் பாக்கி உள்ளது. அதை எங்களுக்கு வழங்கினால் மட்டும் தான் நாங்கள் இந்த பழுது பணியை பார்க்க முடியும் என்று கூறி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, குடிநீர் வீணாகி வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story