பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்கக்கூடாது; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு


பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்கக்கூடாது; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 11:45 PM GMT (Updated: 25 Jun 2019 9:25 PM GMT)

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்கக்கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், நான் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. எனவே சிறிது நேரம் இருப்பேன் என்றார்.

பின்னர் பேச தொடங்கிய விவசாயிகள், தங்களது பகுதி பிரச்சினைகளை குறித்து பேசினர். 10 நிமிடங்களுக்கு பிறகு கலெக்டர், கூட்டத்தில் இருந்து வெளியே கிளம்பி சென்றார்.

உடனே அங்கிருந்த மற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முயற்சித்தனர். ஆனால் விவசாயிகள் கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி வெளிநடப்பு செய்தனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இருந்தாலும் விவசாயிகள் கலெக்டர் வந்த பின் தான் கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை இங்கேயே அமர்ந்திருக்கிறோம் என்று கூறி அங்கேயே அமர்ந்திருந்தனர். அப்போது அவர்கள் மதுரையில் நிரந்தர கலெக்டர், மாவட்ட அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. எப்போது நியமனம் செய்யப்படுவார்கள். நாங்கள் தாய், தந்தையற்ற அனாதைகளாக இருக்கிறோம் என்று பேசினர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

மதுரை மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை தான். இந்த நீர் இல்லையென்றால் மாவட்டத்தில் விவசாய பணிகள் நடக்காது. தற்போதைய நிலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து கிடைக்கும் நீரை வைத்து இருபோக பாசனம் செய்ய முடியவில்லை. தட்டுப்பாடாக இருக்கிறது. இதற்கிடையே தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்க ரூ.1,200 கோடி செலவில் திட்டம் போட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்றனர். அதற்கு பதிலளித்த கலெக்டர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.

அதன்பின் பேசிய விவசாயிகள் அலங்காநல்லூர் கரும்பு ஆலையில் ஆயிரம் டன் அளவுக்கு கரும்பு விவசாயிகள் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அதனை எடுக்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு நடைபெறும் ஊழலால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம் சோதனை அளவிலேயே உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றனர். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

Next Story