புவனகிரி அருகே, பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


புவனகிரி அருகே, பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 9:33 PM GMT)

புவனகிரி அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சீனிவாசன் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகவில்லை. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசனின் பெற்றோர், அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதில் பதறிய அவர்கள் புவனகிரி போலீசில் சீனிவாசன் மாயமானது குறித்து புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கீரப்பாளையம் ஜெ.ஜெ நகரில் உள்ள முட்புதரில் ரத்தக்காயங்களுடன் சீனிவாசன் பிணமாக கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது பற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சீனிவாசனை யாரோ அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். அப்போது அங்கு வந்த சீனிவாசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சீனிவாசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோத தகராறு காரணமாக சீனிவாசனை அவரது நண்பர்கள் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் சீனிவாசனின் நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story