ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற குழாய்கள் வந்தன


ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற குழாய்கள் வந்தன
x
தினத்தந்தி 27 Jun 2019 11:34 PM GMT (Updated: 27 Jun 2019 11:34 PM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற குழாய்கள் வந்தன.

ஜோலார்பேட்டை,

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்காக முதற்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகள் கடந்த வாரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது கட்டமாக குடிநீர் வடிகால் வாரியம், ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோமீட்டர் தூரம் வரை உள்ள ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் என்ற இடத்தில் ரெயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு எவ்வாறு குடிநீர் எடுத்து செல்வது என ஆலோசித்தனர்.

இந்த நிலையில் நேற்று குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பெரிய குழாய்கள் லாரிகளில் எடுத்து வரப்பட்டது. அந்த குழாய்கள் அனைத்தும் மேட்டுசக்கரகுப்பம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அருகில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வழியாக சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் இறக்கி வைக்கப்பட்டது. ஒரு லாரியில் 19 குழாய்கள் வீதம் 4 லாரிகளில் இருந்து 76 குழாய்கள் இறக்கப்பட்டுள்ளது. மேலும் 36 லாரிகளில் குழாய்கள் வர உள்ளது.

இக்குழாய்கள் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடிநீர் தொட்டி வரை பதிக்கப்பட உள்ளன. குழி தோண்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

குழாய்கள் முழுவதும் இறக்கப்பட்ட பிறகு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கலெக்டர் ராமன் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் குழாய்கள் பதிக்கப்படும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியிலும் ஆய்வு செய்தார். அவருடன் அரசு தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story