ஆத்தூரில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அம்மா உணவக ஊழியர்கள் 12 பேர் பணி நீக்கம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆத்தூரில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அம்மா உணவக ஊழியர்கள் 12 பேர் பணி நீக்கம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 11:59 PM GMT (Updated: 27 Jun 2019 11:59 PM GMT)

ஆத்தூரில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அம்மா உணவக ஊழியர்கள் 12 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பஸ் நிறுத்தம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 12 பெண் ஊழியர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12 ஊழியர்களும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியை, அவரது அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர்.

அப்போது ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார முறையில் அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பது இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனிடையே அவர் தரக்குறைவாக பேசுவதாக கூறி, அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து 12 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த ஆத்தூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 12 பேரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் அதிகாரிகள் அம்மா உணவகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதால் 12 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நீங்கள் 12 பேரும் இங்கிருந்து வெளியே செல்லுங்கள் என்று தெரிவித்தனர். மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரிய புதிதாக 12 பெண் ஊழியர்களையும் அழைத்து வந்திருந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த 12 பெண் ஊழியர்களும் அம்மா உணவகத்தின் உள்ளே அமர்ந்து நாங்கள் வெளியே செல்ல மாட்டோம், புதிதாக வந்தவர்களை பணி செய்ய விடமாட்டோம் என ஆவேசமாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்களது கோரிக்கை குறித்து நகராட்சி அலுவலகத்தில் பேசிக் கொள்ளலாம். அதனால் நீங்கள் எழுந்து இங்கிருந்து செல்லுங்கள் என போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதைத்தொடர்ந்து பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட 12 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது:-
அம்மா உணவகம் என்பது அரசின் சார்பில் செயல்படும் உணவகம். இங்கு தரமான உணவு வழங்க வேண்டும். அது சுகாதாரமாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்தூர் அம்மா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பெண்கள் உணவு தயாரிக்கும் இடத்தில் குளிப்பதாகவும் தகவல் பரவியது. இது குறித்து நான் மற்றும் அலுவலர்கள் ஆய்வு நடத்தி, அவர்களுக்கு அறிவுரைகளை கூறினோம். ஆனால் அவர்கள் எதுவும் கேட்பதில்லை.

மேலும் தங்கள் இஷ்டம் போல் தான் பணிசெய்வோம், எங்களை யாரும் கேட்க முடியாது என்ற தோரணையில் வேலை பார்த்தனர். இதனால் அவர்களை வைத்து அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க முடியாது என்பதால், 12 பெண் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தேன். மேலும் புதிதாக 12 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இனி அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story