திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை


திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2019 10:30 PM GMT (Updated: 28 Jun 2019 6:47 PM GMT)

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, 

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே பாண்டிலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 59). மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக கடந்த 31-10-2018 அன்று சிவானந்தம் தனது தாய் பழனியம்மாளை (80) கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

இது தொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்தனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் அவரை போலீசார் அடைந்தனர். சிறையில் விசாரணை கைதியாக தனி அறையில் சிவானந்தம் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறையில் சிவானந்தம் நேற்று அதிகாலை தனக்கு கொடுக்கப்பட்டிருந்த போர்வையை இரும்பு கம்பி கதவில் மாட்டி தூக்கில் தொங்கினார். இதனை கண்ட சிறைக்காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து சென்றனர். அங்கு சிவானந்தத்தை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர், ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த கைதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கே.கே.நகர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி சிவானந்தம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story