பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் திருட்டு


பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 28 Jun 2019 10:00 PM GMT (Updated: 28 Jun 2019 8:40 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருடப்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 60). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் நேற்று பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் உள்ள வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்து தனது மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

இதை கவனித்த மர்ம நபர்கள் இருவர் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

திருட்டு

அண்ணாநகர் பகுதியில் ராஜமூர்த்தி சென்றபோது பின் தொடர்ந்த மர்ம நபர்கள் சில பத்து ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி அவரிடம், உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்று கூறினர். உடனே ராஜமூர்த்தி மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்திவிட்டு கீழே கிடந்த பணத்தை எடுக்க சென்றார்.

அதற்குள் மர்ம நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து சாவியை எடுத்து பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ராஜமூர்த்தி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story