குளித்தலை அரசு பெண்கள் பள்ளி சுவரில் ஓவியம் வரையும் பணி தொடங்கியது


குளித்தலை அரசு பெண்கள் பள்ளி சுவரில் ஓவியம் வரையும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jun 2019 10:30 PM GMT (Updated: 29 Jun 2019 7:51 PM GMT)

குளித்தலை அரசு பெண்கள் பள்ளி சுவரில் விளம்பரங்கள் ஓட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஓவியம் வரையும் பணி தொடங்கியுள்ளது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் தங்களது விளம்பரங்களை பொதுமக்கள் பார்க்கும்வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள் பலர் அரசு பள்ளி சுவர்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த சுவர்களில் கட்சி விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், திருமணம், பிறந்தநாள், கண்ணீர் அஞ்சலி உள்பட பல சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் சிந்தனை சிதைந்து அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பலமுறை பள்ளி சுவர்களில் ஒட்டபட்ட போஸ்டர்கள், எழுதப்பட்ட விளம்பரங்கள் பள்ளி நிர்வாகம் மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டாலும், தொடர்ந்து இங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டே வருகிறது. சுவற்றில் மட்டுமல்லாமல் பள்ளியின் நுழைவுவாயில் உள்ள கேட்டிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உடனடியாக இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டு அரசு பள்ளி சுவர்களில் விளம்பரங்கள் செய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 3-ந்தேதி செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தியின் எதிரொலியாக தற்போது இப்பள்ளி சுவரில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு பள்ளி மாணவிகள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதன்பிறகும் இப்பள்ளி சுவரில் சுவரெட்டிகளை ஒட்டும் நபர்கள் மீதும், பள்ளி அருகே விளம்பர பதாகைகள் வைப்பவர்கள்மீதும் புகார் அளித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், விளம்பரங்களை அகற்றும் செலவை அவர்களே ஏற்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story