பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவு


பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவு
x
தினத்தந்தி 29 Jun 2019 10:00 PM GMT (Updated: 29 Jun 2019 8:06 PM GMT)

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவிட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.

அப்போது, கடலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் எவ்வித பிரச்சினையும் இன்றி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் தொடர்பான பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும், அலுவலர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து துறை அலுவலர்களும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்தவும், தங்களது அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், இது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தங்களது துறை சார்ந்த நிலுவை வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் சரயூ, விசுமகாஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தோஷினி சந்திரா, மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story