வேளாங்கண்ணி விடுதியில் பெண் பிணம்: கொலை செய்யப்பட்டது அம்பலம் பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு


வேளாங்கண்ணி விடுதியில் பெண் பிணம்: கொலை செய்யப்பட்டது அம்பலம் பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 10:15 PM GMT (Updated: 30 Jun 2019 6:46 PM GMT)

வேளாங்கண்ணி விடுதியில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவருடைய கணவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி,

காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி 2 பெண்களுடன் சுற்றுலா வந்தார். வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருளானந்தமும், அவருடன் வந்த 2 பெண்களும் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இவர்கள் 3 பேரும் 26-ந் தேதி அறையை காலி செய்ய வேண்டும். ஆனால் அறையை காலி செய்யவில்லை. 27-ந் தேதி விடுதி ஊழியர்கள் அருளானந்தம் உள்பட 3 பேரும் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அருளானந்தத்துடன் வந்த பெண்களில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விடுதியில் இறந்து கிடந்த பெண் தஞ்சையை சேர்ந்த கவிதா (வயது43) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த மற்றொரு பெண் சுமதி (43) என்பதும், அவர் அருளானந்தத்தின் மனைவி என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அருளானந்தம், சுமதி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் இருந்த சுமதியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை

அருளானந்தத்துக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கவிதா, அருளானந்தத்திடம் பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. இதை அருளானந்தம், தனது மனைவி சுமதியிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அருளானந்தம், சுமதி, கவிதா ஆகிய 3 பேரும் சேர்ந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது பணம் கேட்டது தொடர்பாக அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருளானந்தம், சுமதி ஆகிய 2 பேரும் கவிதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதில் கவிதாவின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

போலீசார் இந்த வழக்கை முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்து இருந்தனர். தற்போது அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி சுமதியின் கணவர் அருளானந்தத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story