புதுக்கோட்டையில் பரபரப்பு: தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு


புதுக்கோட்டையில் பரபரப்பு: தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 10:30 PM GMT (Updated: 30 Jun 2019 8:19 PM GMT)

புதுக்கோட்டையில் தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மச்சுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின் (வயது 40). இவர், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கட்சி பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அருண் ஸ்டாலின் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் ஸ்டாலின் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டில் திரண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story