முருக பக்தர்கள் பாத யாத்திரை செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து பழனிக்கு தனி நடைபாதை அமைக்கும் பணி மும்முரம்


முருக பக்தர்கள் பாத யாத்திரை செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து பழனிக்கு தனி நடைபாதை அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 9:09 PM GMT)

முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை செல்வதற்கு வசதியாக தாராபுரத்தில் இருந்து பழனி வரை தனி நடைபாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தாராபுரம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் உலக பிரசித்திபெற்றது ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக தைப்பூச திருவிழாவின் போது, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் இங்கு வந்து, முருகப்பெருமானை தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம். தைப்பூச திருவிழாவையொட்டி முருக பக்தர்கள், அந்தந்த ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு, பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிமலைக்கு நடந்து சென்று காணிக்கை செலுத்துவார்கள்.

அந்த வகையில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான முருக பக்தர்கள், பாதயாத்திரை செல்லும் போது, தாராபுரம் வழியாகத்தான் பழனிக்கு நடந்து செல்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. விபத்துகளில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் சிலர் இறந்து விடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களில், விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தைப்பூச காலங்களில் இந்த பகுதியில் சாலை விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தாராபுரத்திலிருந்து பழனிக்கு செல்வதற்கு 2 வழித்தடங்கள் உள்ளன. ஒன்று அலங்கியம் வழியாக செல்லும் வழித்தடம். மற்றொன்று தொப்பம்பட்டி வழியாகச் செல்லும் வழித்தடம். பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் அனைவரும் அலங்கியம் வழித்தடத்தில் தான் நடந்து செல்வார்கள்.

இதனால் தாராபுரத்திலிருந்து பழனிக்குச் செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்தும் வாகனங்களும், தைப்பூச காலங்களில் மட்டும் அலங்கியம் வழித்தடத்தில் பழனிக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. இந்த ஒரு சில நாட்களுக்கு அந்த வழித்தடத்தில் போக்குவரத்து வசதி முற்றிலும் பாதிக்கப்படுகிறது, அலங்கியம் வழித்தடத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தது. இதற்கிடையே பழனி செல்லும் முருகப்பக்தர்களின் வசதிக்காக தனி நடைபாதை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பழனி கோவிலுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கி இறப்பதை தவிர்க்க நெடுஞ்சாலையோரம் தனி நடைபாதை அமைக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து தாராபுரத்திலிருந்து அலங்கியம் வழியாக பழனி கோவில் அடிவாரம் வரை, முருகப்பக்தர்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தில் தாராபுரம் போலீஸ் நிலையம் பகுதியிலிருந்து, அலங்கியம் வழியாக பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள திருப்பூர் மாவட்ட எல்லை வரை நெடுஞ்சாலைதுறை தாராபுரம் கோட்டமும், திருப்பூர் மாவட்ட எல்லையிலிருந்து பழனி மலை அடிவாரம் வரை நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் கோட்டமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு தாராபுரம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது, நடைபாதை அமைக்கும் இடங்களில் மரங்கள் குறுக்கிட்டால், மரங்களை வெட்டாமல், மரங்களைச் சுற்றி நடைபாதை அமைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத இடங்களில் அதாவது பாலங்கள் கட்டும் பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. இந்த திட்டத்தில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபாதை அமைக்கப்படுகிறது. இந்த நடைபாதை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் நிறைவடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த தைப்பூச திருவிழாவிற்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள், பாதுகாப்பாக நடைபாதையில் நடந்து செல்ல முடியும்.

Next Story