செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை


செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 10:05 PM GMT)

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி உள்ளது. அதிக போக்குவரத்து வாகனங்களால் இந்த சுங்கச்சாவடி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு புலிப்பாக்கத்தை சேர்ந்த வினோத் (வயது 27) ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு வினோத் உள்ளிட்ட ஊழியர்கள் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுங்கச்சாவடியை அடுத்த புறவழிச்சாலை அருகே உள்ள பள்ளத்தில் வினோத் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தாத வாகனத்தை துரத்தி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்த போன வினோத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.

Next Story