வெற்றிலை சாகுபடியில் நஷ்டம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை திருவையாறு அருகே பரிதாபம்


வெற்றிலை சாகுபடியில் நஷ்டம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை திருவையாறு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 3 July 2019 10:15 PM GMT (Updated: 3 July 2019 7:40 PM GMT)

திருவையாறு அருகே வெற்றிலை சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவையாறு,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆறு, குளங்கள், ஏரிகள் வறண்டு கிடைக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை சந்தித்து இருப்பதால் ஆழ்துளை பாசனம் மூலம் நடைபெறும் விவசாய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளன.

தண்ணீர் பற்றாக்குறையால் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளன. திருவையாறு, மேலதிருப்பூந்துருத்தி, கீழதிருப்பூந்துருத்தி, நடுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வெற்றிலை பயிரில் பூச்சி தாக்குதலும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருவையாறு அருகே உள்ள ஆச்சனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின் (வயது55). விவசாயியான இவர் நடுப்படுகை பகுதியில் வெற்றிலை கொடிக்காலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் பூச்சி தாக்குதலால் வெற்றிலை கொடிக்கால் பாதிக்கப் பட்டது. விளைந்திருந்த வெற்றிலைகளும் விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் இருந்தன. இதன் காரணமாக கடும் நஷ்டம் ஏற்பட்டதால், விரக்தி அடைந்த செபாஸ்டின் சம்பவத்தன்று பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு வெற்றிலை கொடிக்காலில் மயங்கி விழுந்து கிடந்தார்.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று செபாஸ்டின் இறந்தார்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெற்றிலை சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story