காய்கறி விலை கிடுகிடு உயர்வு: நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்


காய்கறி விலை கிடுகிடு உயர்வு: நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்
x
தினத்தந்தி 3 July 2019 10:15 PM GMT (Updated: 3 July 2019 8:48 PM GMT)

காய்கறி விலை கிடுகிடு உயர்வால், நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை டவுன் மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டம் அல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இங்கு இருந்து காய்கறிகள் திருவனந்தபுரம், ஆலங்குளம், தென்காசி, சுரண்டை உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

போதிய மழை இல்லாததால் காய்கறி உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளில் விலை உயர்த்தி விற்கப்படுகின்றது. நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி உள்ளூர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை ஒரு கிலோ காரட் ரூ.65-க்கும், தக்காளி ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி மருத்துவ குணம் கொண்டது. சமையலுக்கு தினந்தோறும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இஞ்சி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்தும், கேரள மாநிலம் வயநாட்டில் இருந்தும் நெல்லை மாார்க்கெட்டுக்கு வருகிறது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ இஞ்சி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நெல்லை டவுன் நயினார் மார்க்கெட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறும் போது, “மைசூரு, வயநாடு ஆகிய ஊர்களில் இருந்து தினந்தோறும் 4 லாரியில் இஞ்சி நெல்லை டவுன் மார்க்கெட்டுக்கு வருகிறது. தற்போது இஞ்சி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை இல்லாததால் உற்பத்தி குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். அதனால் விலை உயர்ந்துள்ளது“ என்றார்.


Next Story