மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ராஜினாமா ஏற்பு


மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ராஜினாமா ஏற்பு
x
தினத்தந்தி 3 July 2019 11:45 PM GMT (Updated: 3 July 2019 9:34 PM GMT)

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும், ஓரிரு நாளில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்திலும் அந்த கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நாந்தெட் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அனைத்து மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அசோக் சவான் யோசனை கூறியிருந்தார்.

இந்த நிலையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்க கடந்த மாதம் 29-ந் தேதி மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில் அசோக் சவான் உள்ளிட்ட மூத்த மாநில தலைவர்கள் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். அப்போது மராட்டிய மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேயும் உடன் இருந்தார்.

இந்த ஆலோசனையின் போது, மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அசோக் சவான் கொடுத்து உள்ளார். ஆனால் நேற்று முன்தினம் தான் அவர் பதவியை ராஜினாமா செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில் அசோக் சவானின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விட்டதாகவும், புதிய தலைவர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்றும் நேற்று காங்கிரஸ் மேலிட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய தலைவராக பாலாசாகேப் தொரட் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னேர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராகவும் பதவி வகிப்பது குறப்பிடத்தக்கது.

Next Story