மேட்டுப்பாளையத்தில், போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


மேட்டுப்பாளையத்தில், போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 10:30 PM GMT (Updated: 4 July 2019 6:47 PM GMT)

மேட்டுப்பாளையத்தில் போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம்,

கோவை தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றிய அலுவலர் பழனி என்கிற பழனிசாமி. இவர் கடந்த மே மாதம் 3-ந் தேதி காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள ஒரு குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பழனிசாமியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டது. எனவே இதை கண்காணிக்கும் வகையில் மே மாதம் 4-ந் தேதி காலை 8 மணியளவில் ‘கியூ’ பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி (வயது 29) மற்றும் அவருடன் பணிபுரியும் போலீசார் செல்வக்குமார், மனோஜ்குமார் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகில் பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, இறந்த பழனிசாமியின் மனைவியிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண், நாகராஜ் மற்றும் சிலர் துணை சூப்பிரண்டு மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை சாதாரண உடையில் இருந்த கியூ பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி செல்போன் கேமரா மூலம் படம் பிடித்தார்.

இதை தகராறு செய்தவர்கள் பார்த்து விட்டு கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்கள். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். உடனே கிருஷ்ணமூர்த்தி ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டனர். இதில் காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கியூ பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக கோவை மாவட்ட சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி செயலாளராக உள்ள மேட்டுப்பாளையம் குமரபுரத்தை சேர்ந்த பெயிண்டர் நாகராஜ் என்கிற ராஜ் (30), மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பொது நல மாணவர் எழுச்சி இயக்க அமைப்பாளர் அருண் என்கிற அருண்குமார் (21), மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் அருண்குமார் கோவை கல்லூரி மாணவர் ஆவார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கலவரம் ஏற்படுத்துதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (பயங்கர ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story