மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது


மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 4:27 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). தனியார் நிறுவன மேற்பார்வையாளர். சம்பவத்தன்று அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ஹரிபிரசாத் சூளகிரி போலீசில் புகார் செய்தார். இதே போல காமன்தொட்டியை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சைதன்யா (25) தனது நிறுவனம் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து சைதன்யா சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்து (25). டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த புகார்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், கண்ணன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அதில் மோட்டார்சைக்கிள்களை திருடியது வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (22), காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (23), வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள புதுமனை கிராமத்தை சேர்ந்த சர்புதீன் (24) என தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதே போல அவர்கள் பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story