பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து அறிவிப்பு இல்லை: மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - குமாரசாமி கருத்து


பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து அறிவிப்பு இல்லை: மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 5 July 2019 11:30 PM GMT (Updated: 5 July 2019 11:03 PM GMT)

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாய உற்பத்தி சங்கங்கள் அமைப்பது, விவசாய விளைபொருட்கள் சந்தையில் ஆன்லைன் மூலமான வர்த்தகத்தை பலப்படுத்துவது, கிராமப்புற தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற திட்டங்களை வரவேற்கிறேன். விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க இன்னும் சில திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும். சரக்கு-சேவை வரியில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறையும் வாய்ப்பு உள்ளது.

மாநிலங்களின் பங்கில் ரூ.1,600 கோடி வரை குறையும் நிலை இருக்கிறது. இது மாநிலங்களின் பொருளாதாரத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல்-டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பதால், கர்நாடகம், அவற்றின் மீது வரி விதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், ரெயில் திட்டங்களுக்கு குறிப்பாக பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பட்ஜெட், அரசின் விருப்பங்களை தெரிவிக்கும் அறிக்கை அல்ல. பட்ஜெட் மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் முக்கிய ஊடகத்தை போன்றது. ரெயில்வே திட்டங்கள் குறித்து விவரமான தகவல் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Next Story