அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் நீடிக்கிறது: மீன்பிடி தொழில் பாதிப்பு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை


அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் நீடிக்கிறது: மீன்பிடி தொழில் பாதிப்பு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 7:02 PM GMT)

அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் நீடித்து வருவதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர்தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் பைபர் படகு, கட்டுமரம் உள்ளிட்ட சிறியவகை நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் பகுதியில் சூறைக்காற்றும் வீசி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கடல் சீற்றமாக இருந்ததால் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பி வந்து விட்டனர்.

மேலும் இப்பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதாகவும், கடலில் 7 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுவதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த 3-ந் தேதி அதிராம்பட்டினத்தில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது, மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்றும் கடல் சீற்றம் நீடித்தது. இதன் காரணமாக மீனவர்களால் மீன்பிடிக்க செல்ல முடியாததால், மீன்பிடி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கரையூர் தெரு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

அதிராம்பட்டினம் பகுதியில் சிறிய வகை நாட்டுப்படகுகள் தான் அதிகம் உள்ளன. இந்த படகுகளின் மூலம் பிடித்து வரும் மீன்களை விற்று தான் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடலில் அதிவேகமாக சூறைக்காற்று வீசி வருகிறது.

கடல் சீற்றமாகவும் உள்ளது. இதன் காரணமாக படகுகளை கடலுக்குள் எடுத்துச்செல்ல முடியவில்லை. திடீர், திடீரென கடல் உள்வாங்கி விடுகிறது. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

Next Story