டீக்கடைக்காரர் கட்டையால் அடித்துக்கொலை முன்விரோதத்தில் பயங்கரம்


டீக்கடைக்காரர் கட்டையால் அடித்துக்கொலை முன்விரோதத்தில் பயங்கரம்
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 9:05 PM GMT)

திருச்சி பொன்மலைப்பட்டியில் டீக்கடைக்காரர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 43). இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்து சென்று விட்டதால் மகள், மகனுடன் வசித்து வந்தார். மேல கல்கண்டார் கோட்டை பனக்கால் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (34) கூலி தொழிலாளி. பிரபாகரன் மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது.

பிரபாகரன் சோமசுந்தரத்தின் டீக்கடைக்கு வந்து அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவருக்கும், சோமசுந்தரத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பிரபாகரன் சோமசுந்தரத்தின் டீக்கடைக்கு வந்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் சோமசுந்தரத்தின் தலையில் கட்டையால் அடித்தார்.

கொலை

இதில் சோமசுந்தரத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் பொன்மலை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சோமசுந்தரம் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி பொன்மலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோமசுந்தரத்தை கொலை செய்த பிரபாகரன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story