முதுகுளத்தூர் அருகே கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை


முதுகுளத்தூர் அருகே கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 9:56 PM GMT)

முதுகுளத்தூர் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆண்டிச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 55). இவரது மனைவி செல்லம்மாள் (50). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த செல்லம்மாள் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

வெகுநேரம் ஆகியும் மனைவி எழுந்து வராததால், மனைவி தூங்குவதாக நினைத்த முனியசாமி, அவரை ஆறுதல்படுத்துவதற்காக எழுப்பி உள்ளார். இந்தநிலையில் செல்லம்மாள் விஷம் குடித்து இறந்தது தெரிந்ததும், அவர் கதறி அழுதபடி சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார்.

பின்பு முனியசாமியும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரும் சேர்ந்து விஷம் குடித்ததாக கருதி அவர்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், செல்லம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதுடன், முனியசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story