‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக காய் நகர்த்திய பா.ஜனதா - பரபரப்பு தகவல்கள்


‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக காய் நகர்த்திய பா.ஜனதா - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 11:00 PM GMT)

கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ரகசியமாக காய்நகர்த்திய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 (தற்போது 105) இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை எண்ணிக்கைக்கு அருகில் வந்தது. காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) 37 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் வஜூபாய் வாலா அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அனுமதி வழங்கினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதை அடுத்து 3-வது நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக கடந்த ஆண்டு 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி பதவி ஏற்றார். இந்த ஆட்சி அமைந்து 13 மாதங்கள் முழுமையாக முடிவடைந்து, 14-வது மாதம் நடைபெற்று வருகிறது.

இந்த 14 மாதங்களில் கர்நாடக பா.ஜனதா சில முறை ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்தது. இதற்காக இந்த எம்.எல்.ஏ.க்களுடன் குதிரை பேரம் நடத்தியது. ஆனால் அந்த முயற்சிகளை கூட்டணி அரசு தோற்கடித்தது.

கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து, மும்பையில் தங்க வைத்தது. அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் நடத்திய ஆடியோ உரையாடலை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டார்.

இது பா.ஜனதா கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா தலைவர்கள் கைவிட்டனர். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வந்தது. பா.ஜனதா தலைவர்கள் அந்த தேர்தலில் கவனம் செலுத்தினர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 23 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தின்போது பேசினர்.

அதே போல் எதிர்பார்ப்பை விட பா.ஜனதா வரலாறு காணாத வகையில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதலே ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா தலைவர்கள் தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த முறை ஆபரேஷன் தாமரையை அதாவது காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியை மொத்தமாக பா.ஜனதா மேலிட தலைவர் ஒருவர் ரகசியமாக மேற்கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்த முறை எக்காரணம் கொண்டும், ஆபரேஷன் தாமரை தோல்வி அடையக்கூடாது என்பதில் பா.ஜனதா தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். வருகிற 12-ந் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் அங்கீகரித்தால், இதனால் கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தனி பெரும்பான்மை பலத்தை இழந்துவிடும். ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்படும் வரை இந்த அரசு பெரும்பான்மை அரசாகவே கருதப்படும்.

கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்- மந்திரி குமாரசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகம் திரும்புகிறார். மேலும் 10 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் இன்று அவசரமாக கர்நாடகம் திரும்புகிறார்.


Next Story