தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 7 July 2019 10:15 PM GMT (Updated: 7 July 2019 5:48 PM GMT)

தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் சவுந்தர்ராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 30). இவருக்கும், அதே ஊர் சர்க்கார் பண்ணை தெருவை சேர்ந்த முத்து பாமா (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1¼ வயதில் ஒரு குழந்தை உள்ளது. வேல்ராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் சென்னையிலேயே குடியிருந்து வருகிறார்.

இந்தநிலையில் வேல்ராஜ் சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். திருமணம் முடிந்து வீட்டில் எல்லோரும் இருந்தனர். அப்போது வேல்ராஜ் குடும்பத்தினருக்கும், முத்து பாமாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திடீரென முத்து பாமா அங்கிருந்து புறப்பட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் முத்து பாமாவின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், முத்து பாபாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

போலீசார் சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் முத்துபாமாவின் உடலை பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றனர். முத்து பாமா தற்கொலைக்கான காரணம் குறித்து, தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story