வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 6:59 PM GMT)

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதாதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

உத்தரியமாதாவுக்கு திருவிழா

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் மும்பை, விசாய் பகுதிகளை சேர்ந்த மராட்டிய மீனவர்கள் சார்பில் உத்தரியமாதாவுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக பேராலயத்தில் அதிபர் பிரபாகர் தலைமையில் மராட்டிய மொழியில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பேராலய பங்குதந்தை சூசை மாணிக்கம் கொடியினை புனிதம் செய்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. பேராலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைத்தெரு, கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.

தேர்பவனி

இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அருட்சகோதரிகள் உள்பட மும்பை, விசாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

Next Story