அண்ணங்காரகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


அண்ணங்காரகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 7:53 PM GMT)

அண்ணங்காரகுப்பம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணங்காரகுப்பம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. தினமும் மகாபாரத கதைகள் கூறப்பட்டு, சாமி வீதிஉலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மூட்டப்பட்டு, தயாராக வைக்கப்பட்டிருந்தது.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள்தோறும் மாவிளக்கு போட்டு தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story