குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மருதூரில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மருதூரில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 6:57 PM GMT)

வேதாரண்யம் அருகே மருதூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கஜா புயலில் பழுதடைந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்கி, அரசு சார்பில் கான்கீரிட் வீடுகள் கட்டி தர வேண்டும். புயலில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலம் முன்பு திரண்டு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணிக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிற்த வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், 15 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் கரியாப்பட்டினம் சாருமடை கடைவீதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Next Story