ஓட்டப்பிடாரம் அருகே ஊருணி தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் அருகே ஊருணி தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2019 10:00 PM GMT (Updated: 9 July 2019 8:14 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே ஊருணி தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் மக்கள் பங்களிப்புடன் ஊருக்கு நூறு கை, ஊருக்காக ஒரு நாள், ஊரை காக்க ஒரு நாள் திட்டத்தின் கீழ், ஊருணி தூர்வாரும் பணி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் மோசமாக உள்ளது. மழை பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இந்த கிராமத்தில் 100 சதவீதம் மக்கள் பங்களிப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊருணி முதல்கட்டமாக தூர்வாரப்பட்டு, மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுவதால், அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமை நிறைந்த கிராமமாக மாற்ற பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும். வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும். இதனால் தண்ணீரை சேமிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட ஊராட்சி முகமை செயற்பொறியாளர் சங்கர ஜோதி, செயற்பொறியாளர் அமலா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சிவகாமி சுந்தரி, மண்டல துணை தாசில்தார் கண்ணன், யூனியன் உதவி பொறியாளர் ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story