தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கேட்டு - மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கேட்டு  - மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 10:45 PM GMT (Updated: 9 July 2019 8:14 PM GMT)

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, முழு கூலியான ரூ.229-ஐ வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் அருகே சோழகனூர், சோழம்பூண்டி, திருவாமாத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனை கண்டித்தும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கக்கோரியும், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அலுவலகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலையை முழு கூலியுடன் வழங்கக்கோரி அவர்கள் கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story