திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 6:31 PM GMT)

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் நெல்லுக்கு மாற்றாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் தங்களது பருத்தியை உரிய விலைக்கு விற்பனை செய்வதற்காக திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

இதில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் செம்பனார்கோவில், திருப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் வித்யா, மேலாளர் ஜாய்பெலிக்ஸ், கண்காணிப்பாளர் செந்தில்முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்்.

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,049-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,526-க்கும், சராசரியாக ரூ.5,873-க்கும் விலை போனது. ஏலத்தில் ரூ.84 லட்சத்து 3 ஆயிரத்து 717 மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Next Story