மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 7:42 PM GMT)

மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த வெங்கனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தின் மூலம் வெங்கனூர், பெரியம்மாபாளையம், உடும்பியம் உள்ளிட்ட கிராம பகுதி மக்களுக்கு விவசாய கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வசூல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு புகார் ஒன்று வந்தது.

புகாரை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனில் முறைகேடு நடந்துள்ளதா? என்பதை கண்டறிய விழிப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்த தொகையில் லட்சக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பழனிச்சாமி, முதுநிலை எழுத்தர் அருணாசலம், காசாளர் முருகேசன், அலுவலக உதவியாளர் பெரியசாமி உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து, வெங்கனூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் தலைவருக்கு பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி பரிந்துரை செய்தார்.

பணியிடை நீக்கம்

இந்த பரிந்துரையின் அடிப்படையில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலன் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் பழனிசாமி உட்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வசூல் செய்த தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story