2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் இன்னும் இயக்கப்படாத நிலை


2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் இன்னும் இயக்கப்படாத நிலை
x
தினத்தந்தி 10 July 2019 11:15 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை இடையேயான அந்தியோதயா ரெயில் சேவையை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த 2017-ம் ஆண்டு தாம்பரம்-செங்கோட்டை மற்றும் தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதில் தாம்பரம்-நெல்லை ரெயில் இயக்கப்பட்டு தற்போது அந்த ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் மட்டும் இயக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் கால அட்டவணை கூட வெளியிடப்பட்டது, ஆனாலும் இந்த ரெயிலை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரெயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை, அந்தியோதயா ரெயிலை இயக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் இருந்து நெல்லைக்கு அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு அதிக பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. இதேபோல் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதை ஏன் ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என தெரியவில்லை.

இந்த ரெயில் அறிவிக்கப்பட்டபடி இயக்க விருதுநகர், தென்காசி மற்றும் தென் பகுதி எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதனை மத்திய மந்திரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story