திருச்சுழி அருகே விவசாயி கொலை: தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஜெயில் - விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு


திருச்சுழி அருகே விவசாயி கொலை: தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஜெயில் - விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

திருச்சுழி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர்,

திருச்சுழி அருகே உள்ள கல்யாணசுந்தர புரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் (வயது 67). அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (77).

ராஜமாணிக்கம் அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்துக்கு செல்லக்கூடிய பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்திருந்தாராம்.

இது பற்றி மைக்கேல் அதிகாரிகளுக்கு புகார் செய்ததால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 21.6.2012 அன்று மைக்கேல் தனது விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தபோது சிலர் அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். அவருடன் சென்ற அவரது மகன் சாமுவேலுவும் (22) அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் ராஜமாணிக்கம், அவரது மகன்கள் மரியராஜ் (51), யேசுராஜ் என்ற யேசுதாஸ் (37) மற்றும் ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் (46), கணபதி என்ற சாலமன் (62) ஆகிய 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி பரிமளம், குற்றம் சாட்டப்பட்ட ராஜமாணிக்கத்துக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது மகன்கள் மரியராஜ், யேசுராஜ் மற்றும் ஸ்டீபன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதில் கணபதி என்ற சாலமன் விடுதலை செய்யப்பட்டார்.

Next Story