இறுதி சடங்கில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; 3 பேருக்கு வெட்டு


இறுதி சடங்கில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; 3 பேருக்கு வெட்டு
x
தினத்தந்தி 10 July 2019 11:30 PM GMT (Updated: 10 July 2019 7:50 PM GMT)

இறுதி சடங்கில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 19). அதே பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் பெயிண்டராக வேலை செய்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்னர் இவர்களுடன் வேலை செய்து வரும் பாலாஜி என்பவருடைய பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், நைனி ஆகியோர் புஷ்பராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரை வழிமறித்து செங்கல்லால் தாக்கி உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புஷ்பராஜின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கரசங்காலில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி சடங்கிற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கரசங்கால் மாலாலிபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா என்ற சிவபிரகாசம் (35) நின்று கொண்டிருந்தார். அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பராஜின் தந்தை மதன் (54), கீழ்படப்பை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (28), மணிமங்கலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜேஷ் (28) ஆகியோருக்கும் கத்தி வெட்டு விழுந்தது.

இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவபிரகாசம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏழுமலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், ராஜேஷ் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், மதன் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Next Story