பாசிக் ஊழியர்கள் சாலைமறியல் - 80 பேர் கைது


பாசிக் ஊழியர்கள் சாலைமறியல் - 80 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 8:29 PM GMT)

சாலைமறியலில் ஈடுபட்ட பாசிக் ஊழியர்கள் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 57 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், தினக்கூலி ஊழியராக 480 நாட்கள் பணி முடித்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்களது போராட்டம் 15-வது நாளாக நீடித்தது. பாசிக் தலைமை அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் அங்கிருந்து ராஜீவ்காந்தி சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம் உள்பட நிர்வாகிகள் பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் ராஜீவ்காந்தி சிக்னலை அடைந்ததும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் உடனடியாக மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட சுமார் 80 பேரை கைது செய்தனர்.

கைதான அனைவரும் சிறிதுநேரம் கோரிமேடு காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story