நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 July 2019 10:50 PM GMT (Updated: 10 July 2019 10:50 PM GMT)

நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கற்பழிப்பு வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கற்பழிப்பு வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாணவி கர்ப்பம்

நவிமும்பை நெருலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 13 வயது மாணவியை கடந்த 2016-ம் ஆண்டு அங்கு பணிபுரிந்து வந்த 34 வயது ஆசிரியர் ஒருவர் கற்பழித்து உள்ளார். மகள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் கருவை கலைக்க டாக்டர் ஒருவரை அணுகிய போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

டாக்டர் போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து, டெல்லியில் பதுங்கியிருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளி முன் திரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பெரியளவில் போராட்டம் நடத்தினார்கள். ஆசிரியரால் மாணவி கற்பழிக்கப்பட்ட இந்த சம்பவம் நவிமும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கைதான ஆசிரியர் மீது போலீசார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேல்முறையீடு செய்வோம்

இந்த நிலையில், மாணவியின் கற்பழிப்பு வழக்கில் தனது கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக அந்த ஆசிரியரின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனது கணவர் தான் மாணவியை கர்ப்பமாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

ஆனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுவுடன் எனது கணவரின் மரபணு ஒத்துபோகவில்லை. அப்படியானால் மாணவியின் கருவுக்கு உண்மையான தந்தை யார்? உண்மையான குற்றவாளி யார்?.

இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்த அவமானத்துடன் எனது கணவரால் வாழ முடியாது. கடந்த 3 ஆண்டுகளாக உண்மையான குற்றவாளியை தேடி வருகிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’’ என்றார்.

Next Story