முல்லுண்டில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டிகளிடம் தங்கச்சங்கிலி பறித்த அண்ணன்-தம்பி சிக்கினர்


முல்லுண்டில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டிகளிடம் தங்கச்சங்கிலி பறித்த அண்ணன்-தம்பி சிக்கினர்
x
தினத்தந்தி 10 July 2019 10:53 PM GMT (Updated: 10 July 2019 10:53 PM GMT)

முல்லுண்டில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டிகளிடம் தங்கச்சங்கிலி பறித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

முல்லுண்டில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டிகளிடம் தங்கச்சங்கிலி பறித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

மும்பை முல்லுண்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் சாலையில் நடந்து சென்ற 2 மூதாட்டிகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் தங்கச்சங்கிலிகளை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நவ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் நவ்கர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கூடுதல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில் தோர்வே மற்றும் பெண் போலீஸ் வந்தனா கேதாரே ஆகியோர் ஜீப்பில் தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டிகளிடம் தங்கச்சங்கிலியை பறிக்க பயன்படுத்திய அதே மோட்டார் சைக்கிள் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

துரத்தி பிடித்தனர்

இதையடுத்து போலீசார் அவர்கள் அருகே சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். போலீசாரும் அவர்களை ஜீப்பில் துரத்தி சென்றனர். இதில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் நடைபாதையில் மோதி கீழே விழுந்தனர்.

இருப்பினும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இருவரும் அவர்களை துரத்தி சென்று அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் விஜய் புஜாரி (வயது 42) மற்றும் இவரின் தம்பி அஜய் (36) என்பது தொியவந்தது. இருவரும் வயதான பெண்களை குறிவைத்து தங்கச்சங்கிலிகளை பறித்து வந்தது தெரியவந்தது.

Next Story