கூடலூர், பந்தலூர் நகராட்சிகளில் முழு சுகாதார பணி - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்


கூடலூர், பந்தலூர் நகராட்சிகளில் முழு சுகாதார பணி - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 5:55 PM GMT)

கூடலூர், பந்தலூர் நகராட்சிகளில் முழு சுகாதார பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமை நகராட்சிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழு சுகாதார பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இருந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தில் தூய்மை பணி மேற்கொண்டார். தொடர்ந்து கழிவுநீர் வாய்க்காலை முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள், அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோர முட்புதர்களை வெட்டி அகற்றினர். தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மூலிகை பண்ணையில் கலெக்டர் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் ரவி, தாலுகா அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் புகழேந்தி உள்பட பலத்துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட் டார். மேலும் அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வெட்டி, குப்பைகளை அகற்றினர். இதேபோல் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ- மாணவிகள் பார்த்தீனிய செடிகளை கண்டறிந்து வெட்டி அழித்தனர். இதை கண்ட கலெக்டர் மாணவர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சக்திவேல், பொறியாளர் வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் அர்ஜூனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எருமாடு, கோட்டூர், நரிக்கொல்லி, உழுவாடு, புத்தன்வீடு, காளியோடு, அத்திச்சால், பனமூலா ஆகிய பகுதியில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story