சிறுமியை கடத்தி விபசாரம்; 3 பெண்கள் கைது கற்பழிப்பு குற்றச்சாட்டில் 5 பேருக்கு வலைவீச்சு


சிறுமியை கடத்தி விபசாரம்; 3 பெண்கள் கைது கற்பழிப்பு குற்றச்சாட்டில் 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 6:48 PM GMT)

வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய 16 வயது சிறுமியை கடத்தி, வீட்டில் சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பெண்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமியை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி திட்டியதால் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் 7-ந்தேதி புளியந்தோப்பு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாயமான சிறுமி, கடந்த 9-ந்தேதி தானாக வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர், வீட்டில் இருந்து வெளியேறிய தன்னை, சிலர் கடத்திச்சென்று வீட்டில் சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அப்போது தன்னை 5 பேர் கற்பழித்ததாகவும் கூறி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி புளியந்தோப்பு போலீசில் மீண்டும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர்.

3-ந்தேதி தனது பாட்டி திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, வியாசர்பாடி அன்னை சத்யாநகரில் உள்ள ஜபினா(30) என்பவரது வீட்டுக்கு சென்றார். மறுநாள் அவர், அந்த சிறுமியை புளியந்தோப்பு புதிய கார்ப்பரேசன் சந்துவில் உள்ள முபினாபேகம் (37) என்பவரது வீட்டில் விட்டுவிட்டார்.

முபினா பேகம், அந்த சிறுமியை புரசைவாக்கம் முத்து தெருவில் உள்ள நிஷா (36) என்பவரது வீட்டில் ஒப்படைத்து உள்ளார். நிஷா, அந்த சிறுமியை தனது வீட்டில் சிறை வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அப்போது 5 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்து இருப்பதும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஜபினா, முபினா பேகம் மற்றும் நிஷா ஆகியோர் பங்குபோட்டு கொண்டதும் தெரிந்தது.

இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சிறுமியை கடத்தி சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய ஜபினா, முபினாபேகம், நிஷா 3 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் சிறுமியை கற்பழித்த 5 வாலிபர்கள் யார், யார்? என்பது பற்றி விசாரித்து வருவதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story