திருச்சி கோளரங்கத்தில் ரூ.2 கோடியில் நவீன காட்சிக்கூடம் அமைக்கும் பணி தீவிரம்


திருச்சி கோளரங்கத்தில் ரூ.2 கோடியில் நவீன காட்சிக்கூடம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 8:22 PM GMT)

திருச்சி கோளரங்கத்தில் ரூ.2 கோடியில் நவீன காட்சிக்கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி,

திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் முப்பரிமாண காட்சி கூடம், விண்வெளி அரங்கம், அறிவியல் காட்சிக்கூடம் உள்ளிட்டவை உள்ளன. மேலும் அரிய வகை விலங்கினங்களின் உருவச்சிலைகள் கொண்ட பூங்காவும் உள்ளது. இங்கு தொலைநோக்கி கருவி மூலம் வான் பொருட்களை காண அவ்வப்போது நிகழ்ச்சி நடைபெறும். கோளரங்கத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்காவும் உள்ளது.

அறிவியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளும் கோளரங்கத்திற்கு வருகை தருவது உண்டு. மேலும் பொழுதுபோக்கை பயனுள்ளதாக கழிக்கவும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கோளரங்கத்திற்கு அழைத்து வந்து காண்பிப்பது உண்டு.

நவீன காட்சிக்கூடம்

அறிவியல் தொடர்பான விளக்க பொருட்களும் இதில் இடம் பெற்றிருப்பதால் கோளரங்கத்தை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போதைய காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்ப வகையிலான அறிவியல் பொருட்கள் வைப்பதற்காக ரூ.2 கோடியில் காட்சிக்கூடம் கோளரங்க வளாகத்தில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து கோளரங்க அதிகாரிகள் கூறுகையில், நவீன காட்சிக்கூடம் அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். இதில் அறிவியல் ஆய்வுக்கூடம், வேதியியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதில் அறிவியல் தொடர்பான நவீன பொருட்கள் வைக்கப்பட உள்ளன. பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த காட்சிக்கூடம் இருக்கும்” என்றனர்.

Next Story