விருதுநகர்-சாத்தூர் இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிய நடைமேம்பால திட்டப்பணியை நிறைவேற்ற வேண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கோரிக்கை


விருதுநகர்-சாத்தூர் இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிய நடைமேம்பால திட்டப்பணியை நிறைவேற்ற வேண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 9:45 PM GMT (Updated: 11 July 2019 8:23 PM GMT)

விருதுநகர்-சாத்தூர் இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிய நடைமேம்பால திட்டப்பணியை மீண்டும் நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 

கடந்த 2014-ம் ஆண்டு விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்ட கலெக்டர் அலுவலக வளாக பகுதி மற்றும் படந்தால் விலக்கு அருகே நடைமேம்பாலம் கட்டுவதற்கு அப்போதைய எம்.பி.யாக இருந்த மாணிக்கம்தாகூர், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தலா ரூ.5 கோடி நிதி உதவி பெற்றார். இத்திட்டப்பணி தொடங்குவதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

இந்த நடைமேம்பால திட்டப்பணிகளை தொடங்குவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் 16-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் தேர்தல் முடிந்த பின்னர் இத்திட்டப்பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்து துறை இணைமந்திரியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்துக்கு வந்திருந்த போது, விருதுநகர்-சாத்தூர் இடையே நடைமேம்பாலம் திட்டப்பணிகள் முடங்கியது குறித்து தெரிவிக்கப்பட்டு வாகன விபத்துகளை தவிர்க்க இந்த நடை மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவரும் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீண்டும் மண் சோதனை உள்ளிட்டபணிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் திட்டப்பணிகள் தொடங்கப்படாமல் தொடர்ந்து முடங்கிய நிலையிலேயே இருந்தது. அப்போதைய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடைமேம்பாலம் திட்டம் நடைபெறும் என உறுதி அளித்து இருந்த போதிலும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

தற்போது நடைமேம்பாலம் திட்டப்பணிக்காக நிதி ஒதுக்கீடு பெற்று தந்த மாணிக் கம்தாகூர் மீண்டும் இத்தொகுதியின் எம்.பி.யாக தேர்வு பெற்றுள்ளார். எனவே விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் முடக்கம் அடைந்துள்ள 2 மேம்பால கட்டுமான திட்டப்பணியை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான திட்டப்பணிகளை முடக்கம் அடைய செய்வது ஏற்புடையது அல்ல.

எனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நடைமேம்பால திட்டப்பணிகளை மீண்டும் நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story